அக். 6ம் தேதி பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
மதுரை: பீடித் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 ம் தேதி அன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ் நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ம. ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில், பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, இலை குறைவு மூலம் மறைமுக கூலி வெட்டு, குறைந்தபட்ச கூலி வழங்க மறுப்பு, பென்சன் குறைந்தபட்சம் ரூ.1000, வீடு கட்ட மானியம் ரூ.1லட்சம், கல்வி உதவித்தொகை, மருத் துவவசதி, சர்வீஸ் கார்டு வழங்குதல், பணிக்கொடை வழங்குதல், காண்ட்ராக்ட் முறை ரத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த பல வருடமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு, 18.2.2009 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி, தொழிலாளர் நல அமைச்சர் , தொழிலாளர் துறை செயலாளர், ஆணையர் மற்றும் பீடிக் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை, பீடிக் கம்பெனிகள் சட்டப்படியான உரிமைகளை வழங்க மறுத்து, சட்ட விரோதமான முறையில் பீடி உற்பத்தி செய்து வருகிறார்கள்.
இதனால், தமிழக அரசு, சட்டக் கூலி - சட்ட சலுகைகள் அமலாக்கத்தை கை விட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோரிக்கைகள் மீது தொழிலாளர் துறை தனி துணை ஆணையர் முன்பு, 7 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் ஒரு பீடிக் கம்பெனி முதலாளியும் கலந்து கொண்டதில்லை.
24.9.2009 அன்று நடந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. தொழிலாளர் துறை எடுக்கும் சட்டபூர்வ மான நடவடிக்கைகளை மதிக்காமலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறார்கள். பீடி முதலாளிகளின் இத்தகைய போக்கு கண்டனத்திற்குரியது.
எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications