கல்விக் கடன் கேட்பவர்கள் ஏழைகள், டாடா, பிர்லா இல்லை - எம்.எல்.ஏ பாய்ச்சல்
நெல்லை: வங்கிகளில் கல்வி கடன் கேட்பவர்கள் டாடா, பிர்லா இல்லை என வங்கியாளர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ அப்பாவு காட்டத்துடன் கூறினார்.
நெல்லை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
கடந்த ஆண்டு ராதாபுரத்தில் 567 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்படவில்லை.
ஐசிஐசிஐ, பாண்டியன் கிராம வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை கடன் வழங்க மறுக்கின்றன. கல்வி கடன் வழங்க எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது. எந்த ஆவணங்களையும் கேட்க கூடாது என என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் வங்கிகள் நாங்கள் அளிக்கும் பரிந்துரை கடிதங்களை கூட வங்கிகள் வாங்குவதில்லை. கடன் கேட்டு வரும் மாணவர்களிடம் வங்கிகள் உங்கள் பெற்றோரின் வருமான வரி அட்டையை கொண்டு வாருங்கள், ஒவ்வொரு ஆண்டும் பெற்ற மதிப்பெண் பட்டியல் கொண்டு வாருங்கள் என கெடுபிடி செய்கின்றன.
கல்வி கடன் கேட்பவர்கள் யாரும் டாடா, பிர்லாவுக்கு பிறக்கவில்லை. கல்வி கடன் கேட்பவர்களுக்கு குடும்ப அட்டையை தவிர வேறு எதுவும் சொத்துகள் இல்லை. தனி நபர்களுக்கு தொழில் தொடங்க கடன் கேட்டு நாங்கள் பரிந்துரை செய்யவில்லை.
ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமாக மாணவர்களை அலைக்கழிக்கும் பரிதாப நிலை உள்ளது என்றார்.
கூட்டத்தில் கலெக்டர் ஜெயராமன் பேசுகையில்,
நெல்லை மாவட்டத்தில் பாண்டியன் கிராம வங்கியின் 51 கிளைகள் உள்ளன. ஆனால் 80 சதவீதம் மதிப்பெண் இருந்தால்தான் கடன் கொடுக்க முடியும் என கூறுகிறீர்கள். அப்படியானால் எந்த வங்கியில் போய் அந்த மாணவர் கடன் பெறுவார்.
இதுபோன்று கல்வி கடன் மறுக்கப்பட்ட மாணவர்கள் அந்தந்த வங்களில் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள் சேவை கிளைகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு வரும் 10ம் தேதி கடன் ஆணை வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications