தேமுதிக செயலர் கொலை-திமுக பிரமுகர் கைது
திருச்சி: திருச்சியில், தே.மு.தி.க கிளைச் செயலாளரை அடித்துக் கொலை செய்த தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சக்திவேல் (22) இவர் 56 வது வார்டு தே.மு.தி.க. கிளைச் செயலாளராக இருந்தார்.
இவர், அப் பகுதியில் கட்சிக் கொடிக் கம்பம் அமைத்திருந்தார். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க.பிரமுகர்கள் முருகன், முத்தையா, வடிவேல் , மாரிமுத்து ஆகியோருக்கு இடையே பிரச்சனை நிலவி வந்தது.
இந்த நிலையில், இந் கொடிக் கம்பம் தொர்பாக அவர்கள் சக்திவேலிடம் தகராறு செய்தனர். இதில் வாக்கு வாதம் முற்றி பிரச்சனை வெடித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.பிரமுகர்கள் முருகன், முத்தையா, வடிவேல், மாரிமுத்து ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சக்திவேலை தாக்கினர். காயமுற்ற சக்திவேல், போலீசில் புகார் அளித்தார்.
இந்தநிலையில், நேற்று சக்திவேலிடம், போலீசில் ஏன் புகார் செய்தாய் எனக் கூறி மீண்டும் அவரை அடித்து உதைத்துள்ளனர்.
இதில், சக்திவேலின் காலை பிடித்து கீழே இழுத்ததில், சக்திவேலுக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சக்திவேல், வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக போலீசார், முருகனை கைது செய்தனர். தப்பியோடிய முத்தையா, வடிவேல், மாரிமுத்துவை ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.