இப்போது குடியாத்தம் பிரச்சனை!..ஜெயலலிதா
சென்னை: குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்
குளுகுளு கொட நாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியாத்தம் நகராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதைப்போக்க நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. குப்பைகள் அகற்றப்படாத தன் காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், தொற்று நோய்கள் பரவக் கூடிய அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நகர மன்றத் தலைவரை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்குக் கூட முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
அத்தியாவசியப் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,
வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை காலை குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.