திருச்சி மியூசியத்தில் பல லட்சம் மதிப்பு சிலைகள் கொள்ளை
திருச்சி: திருச்சி அருங்காட்சியகத்தில் பல லட்சம் மதிப்புள்ள 10 ஐம்பொன் சிலைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நெல்லை சிலை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் இதில் கைவரிசை காட்டியுள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் கடந்த ஜூன் மாதம் 50 லட்சம் மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. எஸ்பி அலுவலகம் அருகே நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.
இந்நிலையில் திருச்சி அருங்காட்சியகத்தில் 10 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரு கொள்ளையிலும் ஓரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் திருச்சி அருங்காட்சியகத்தில் பதிவாகியுள்ள கைரேகையும், நெல்லையில் ஏற்கனவே பதிவாகியுள்ள கொள்ளையர்களின் கைரேகையை வைத்தும் போலீசார் ஓப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு சம்பவங்களுமே போலீஸ் நிலையங்களுக்கு அருகில் துணிச்சலாக போலீசாருக்கு சவால் விடும் வகையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.