சென்னையில் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள வங்கி ஒன்றுக்கு இன்று காலை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் பல மணி நேரம் தேடியும் எதுவும் சிக்கவில்லை. அது புரளியாக இருக்கும் என தெரிகிறது.
சென்னையில் ஜனநெருக்கடி மிகுந்த தி.நகர் பகுதியில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் அந்த வங்கி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் வங்கி மேலாளருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் உங்களது வங்கியில் குண்டு வைத்துள்ளோம். அது விரைவில் வெடிக்கும் என கூறியுள்ளார்.
இதையடுத்து மிரண்டு போன வங்கி மேலாளர் உடனடியாக மாம்பலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸார் அது புரளியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், தொலைபேசியில் தொடர்பு கொண்டது யார், அவர் எதற்காக இது அவ்வாறு தெரிவித்தார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.