பட்டாசு ஆலையில் விபத்து - வெடிகள் வெடித்ததில் மேலாளர் பலி
சிவகாசி: சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மேலாளர் பலியானார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான கிட்டங்கி உள்ளது. தீபாவளி நேரம் என்பதால் சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு லாரிகளில் அனுப்புவதற்காக இந்த கிட்டங்கியில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று மதியம் ஒரு சரக்கு ஆட்டோவில் பட்டாசு பண்டல்களை தொழிலாளர்கள் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு பட்டாசு பண்டல் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தது. இதில் ஏற்பட்ட உராய்வில் அந்த பண்டலில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த பட்டாசுகள் தீப்பிழம்புடன் கிட்டங்கியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மற்ற பட்டாசுகள் மீது விழுந்தன.
இதனால் அந்த பட்டாசு பண்டல்கள் மீதும் தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் சரமாரியாக வெடித்தன. இதனால் சுமார் 10 நிமிடங்களில் அந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசுகளும் சரமாரியாக வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் கிட்டங்கியின் மேலாளர் நந்திராஜ் (35) உடல் கருகி உயிரிழந்தார்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.