சோனியா படம் எரித்த காங். பெண் நிர்வாகி நீக்கம்
சென்னை: சோனியா காந்தியின் உருவ படம், காங்கிரஸ் கட்சி கொடி ஆகியவற்றை எரித்த பெண் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிட விரும்பிய மாவட்ட பெண்கள் காங்கிரஸ் தலைவி கல்யாணி என்பவருக்கு சமீபத்தில் சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து கோபமடைந்த அவர் சோனியாவின் உருவப்படம், காங்கிரஸ் கொடி ஆகியவற்றை எரித்தார்.
இந்த சம்பவம் காங்கிரஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்சியில் கடந்த 24.09.09 அன்று காங்கிரஸ் கட்சிக்கு மாறாத களங்கம் ஏற்படுத்தும் வகையில் மாவட்ட பெண்கள் காங்கிரஸ் தலைவி கல்யாணி செயல்பட்டுள்ளார்.
அவர் சோனியா காந்தி படத்தையும், காங்கிரஸ் கட்சி கொடியையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதன்மூலம் கட்சிக்கு மாபெரும் அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளார். அச்செய்தி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டன.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.
காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் கட்சியின் பெயரில் அவரோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் தங்கபாலு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications