ஸ்டிரைக் முடிந்தது - பறக்கத் தொடங்கின ஏர் இந்தியா விமானங்கள்

"வழக்கமான நிலைமைக்கு திரும்பிவிட்டது ஏர் இந்தியா. இன்று மாலைக்குள் அனைத்து செக்டார்களிலும் விமானங்கள் இயங்கும்" என ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக சில தனியார் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை 200 சதவிகிதம் வரை உயர்த்தி விற்றதாகவும் கூறப்படுகிறது.
வேலை நிறுத்தம் நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இன்றுதான் அனைத்து விமானிகளும் பணிக்குத் திரும்பினர்.
முதல்கட்டமாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட விமானிகள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர். டெல்லியிலிருந்து பிராங்க்பர்ட், லண்டன், டொரண்டோ, மும்பையிலிருந்து லண்டன், சிகாகோ, அகமதாபாத் - சிகாகோ போன்ற வழித்தடங்களில் விமானங்கள் இன்று காலை இயக்கப்பட்டன.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம், டிக்கெட் கிடைக்காத நிலை போன்றவற்றைத் தவிர்க்க கூடுதல் இருக்கைகளுடன் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications