சென்னை வழியாக வளைகுடாவுக்கு செல்லும் 'பார்' பெண்களைப் பிடிக்க கிடுக்கிப்பிடி
சென்னை: துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் டான்ஸ் ஆடவும், பார்களில் பணியாற்றவும் சென்னை வழியாக இளம் பெண்கள் அனுப்பப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலிருந்து பெருமளவில் இளம் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அங்குள்ள பார்களில் பணியாற்றவும், நடனமாடவும் இவர்கள் அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இப்படி அழைத்துச் செல்லப்படும் பெண்களில் பலர் மைனர் வயதுடையவர்கள் என்றும் ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் வயதைக் கூடுதலாக காட்டி இவர்களை ஏஜென்டுகள் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் மும்பை வழியாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளுக்கு பெருமளவில் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அங்கு கெடுபிடிகள் அதிகரித்து விட்டதால் பெங்களூர், சென்னை உள்ளிட்ட பிற நகரங்கள் வழியாக அனுப்பப்பட்டு வந்தனர்.
ஆனால் சென்னை வழியாக இதுபோல இளம் பெண்களை சட்டவிரோதமாக அனுப்புவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 500 பேர் இவ்வாறு செல்ல முயன்று பிடிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை யாரும் சிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை வழியாக கிட்டத்தட்ட 30 ஆயிரம் பெண்கள் இதுபோல மோசடியான முறையில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் கெடுபிடி அதிகரித்துள்ளதால் இளம் பெண்கள் தற்போது டெல்லி பக்கம் தங்களது போக்குவரத்தைத் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.