சென்னையில் ஒரு கோபிகா-கணவருடன் சேர்க்கக் கோரி உண்ணாவிரதம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில், தன்னையும், குழந்தையையும் கணவர் ஏற்று கொள்ள மறுக்கிறார் என கோபிகா என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அவரை போலவே சென்னையிலும் ஒரு இளம்பெண் கணவர் வீட்டு முன் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.
அந்த பெண்ணின் பெயர் ஹேமலதா. இவர் கணவர் சரவணன், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்க்கிறார்.
சரவணனின் வீடு நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர், சக்திவிநாயகர் கோவில் தெருவில் உள்ளது.
இருவருக்கும் இதுவரை குழந்தை பிறக்கவில்லை. ஆனால், ஹேமலதா இரண்டு முறை கர்ப்பம் தரித்துள்ளார். அந்த இரு முறையும் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
இதை காரணம் காட்டி அவரது கணவர் விவாகரத்து கேட்பதாகவும், ஹேமலதாவுக்கு குழந்தை பெற்று கொள்ள விருப்பமில்லை. அதனால் தான் இரண்டு குழந்தையும் இறந்து போனது என்றும் அவர் குற்றம்சாட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஹேமலதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சரவணன் போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார். மேலும் தற்போது தனியாக வசித்து வரும் சரவணனுக்கு இரண்டாவது திருமண ஏற்பாடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹேமலதா தனது பெற்றோருடன் நேற்று இரவு முதல் கணவர் வீட்டுக்கு முன்னதாக போராட்டம் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
எனது கணவரின் இரண்டாவது திருமணத்தை தடுக்க வேண்டும் என போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கணவரோடு சேர்த்து வைக்கும் வரை அவரது வீட்டின் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
கன்னியாகுமரிப் பெண்ணைப் போல சென்னையிலும் ஒரு பெண் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.