ஸ்வைன்-கன்னியாகுமரியில் லண்டன் தமிழர் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பன்றி காய்ச்சலுக்கு லண்டனைச் சேர்ந்த தமிழர் பலியானார். அதே போல விழுப்புரத்திலும் ஒரு வாலிபர் இந்த நோக்கு பலியானார்.
குமரி மாவட்டத்தில் இந்த நோய் தாக்குதலுக்கு வத்சலா குமரி, நிஷா ஆகியோர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் குமரி ராமன்புதூரை பூர்விகமாக கொண்ட பெட்ரோனிக்ஸ் பெலிக்ஸ் என்ற முதியவர் லண்டனில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த இவருக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கியது.
இதனால் ஆசாரிபள்ளம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன்றி நேற்று பலியானார். இதன்மூலம் குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் வாலிபர் புதுவையில் பலி:
இந் நிலையில் விழுப்புரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். திண்டிவனத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (36) சில தினங்களுக்கு முன் கடும் காய்ச்சலுடன் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பலியானார்.