போபர்ஸ் வழக்கிலிருந்து குவாத்ரோச்சி பெயரை நீக்கக் கோரி சிபிஐ மனு
டெல்லி: ரூ. 64 கோடி போபர்ஸ் பீரங்கி ஊழல் பேரம் தொடர்பான வழக்கிலிருந்து இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பெயரை நீக்கி விடக் கோரி சிபிஐ சார்பில் இன்று டெல்லி கோர்ட்டில், முறைப்படி மனு செய்யப்பட்டது
இத்தாலிய தொழிலதிபரான குவாத்ரோச்சி, போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ரூ. 64 கோடி கமிஷன் அடித்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. ஆனால் குவாத்ரோச்சியை விசாரணைக்காக இந்தியா கொண்டு வர சிபிஐ 'கடுமையாக' முயன்றும் அது முடியவில்லை.
இந்த நிலையில் வழக்கை மூடி விடுவது என சிபிஐ முடிவு செய்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வர கடுமையாக முயன்றும் அதில் தோல்வி அடைந்து விட்டோம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே இழுத்துக் கொண்டு போவது. குவாத்ரோச்சிக்கு எதிரான ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கை மூடி விடுவது என்ற முடிவு சரியானதே என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிபிஐ சார்பில், டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் காவேரி பவேஜா முன்னிலையில் சிஆர்பிசி 321வது பிரிவின் கீழ் சிபிஐ மனு ஒன்றைத் தாக்கல் செய்ததது.
அதில், போபர்ஸ் பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாத்ரோச்சியை விசாரணைக்காக கடந்த 19 வருடங்களாக இந்தியா கொண்டு வர முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றுக்குப் பலன் கிடைக்கவில்லை.
எனவே குவாத்ரோச்சியின் பெயரை வழக்கிலிருந்து நீக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும். அதன் பின்னர் குவாத்ரோச்சியின் பெயரை நீக்குவது குறித்து கோர்ட் முடிவு செய்யும்.
போபர்ஸ் ஊழல் வழக்கை மூடக் கோரி சிபிஐ மனுத் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஒருவரது பெயரை மட்டுமே நீக்க அது மனு தாக்கல் செய்வதாக முன்னதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா விளக்கியிருந்தார்.
1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராணுவத்தி்ற்கு போபர்ஸ் பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதில் புரோக்கராக செயல்பட்ட குவாத்ரோச்சி ரூ. 64 கோடி பணத்தை கமிஷனாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அன்று முதல் இந்த வழக்கு தொடர்ந்து இழுபறியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications