ஐஐடி பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விட்டது - கபில் சிபல்
இருப்பினும் தங்களது போராட்டத்தைக் கைவிடுவது குறித்து இதுவரை ஐஐடி ஆசிரியர்கள் எதுவும் கூறாமல் உள்ளனர்.
நேற்று ஐஐடி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் சிபல் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊதிய நிர்ணயம், ஊதிய உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் சிபல் கூறுகையில், ஊதிய நிர்ணயம் தொடர்பாக ஐஐடி ஆசிரியர்களுக்கும், மனித வள மேம்பாட்டு அமைச்சத்திற்கும் இடையே நிலவி வந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
அரசு இதுதொடர்பாக அறிவித்த விதிமுறைகள் வழி காட்டிதான். இதில் மாற்றம் செய்ய முடியும், தளர்த்தவும் முடியும். சில விதி விலக்குகளில் திறமை அடிப்படையில் கூடுதல் ஊதியம் வழங்குவது குறித்து ஐஐடி இயக்குநர்கள் தாராளமாக முடிவெடுக்க முடியும் என்றார்.
அகில இந்திய ஐஐசி பேராசிரியர் கூட்டமைப்பின் தலைவரான பேராசிரியர் தேன்மொழி இந்த கூட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இருப்பினும் தங்களது தொடர் போராட்டங்கள் வாபஸ் பெறப்படுமா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.