ஆந்திராவில் பேய் மழை - ரயில்கள் மாற்றம், ரத்து
சென்னை: ஆந்திராவில் தொடர்ந்து பேய் மழை பெய்து வருவதால், சென்னையிலிருந்து ஆந்திரா வழியாக செல்லும் பல ரயில்கள் மாற்றி விடப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென் மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அந்த வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை வரவேண்டிய மும்பை சி.எஸ்.டி.-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வாடி, செகந்திரபாத், காழிப்பேட், விஜயவாடா, கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு 7.45 மணிக்கு சென்னை வர வேண்டிய தாதர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செகந்திராபாத், விஜயவாடா, கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டு, அதிகாலை ஒரு மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி வரவேண்டிய மும்பை சி.எஸ்.டி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செகந்திராபாத், காழிப்பேட், விஜயவாடா, கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி வழியாக திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும்.
லோக்மானிய திலக்-கோவை எக்ஸ்பிரஸ் வாடி, ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக திருப்பி விடப்பட்டு காலை 6.30 மணிக்கு குறித்த நேரத்தில் கோவையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-ந் தேதி மாலை 4 மணிக்கு கச்சேகுடாவில் இருந்து புறப்பட்ட கச்சேகுடா-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 8.40 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
நேற்று இரவு 10.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்டிரல் மும்பை சி.எஸ்.டி மெயில் இன்று சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும்.
நேற்று இரவு 10.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு சென்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி-மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் அன்றைய தினம் காலை 10 மணிக்கு புறப்படும்.
லோக்மானிய திலக்-மங்களூர் எக்ஸ்பிரஸ், லோக்மானிய திலக்-திருவனந்தபுரம் நேத்ராவதி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-லோக்மானிய திலக் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்கள் இன்று சனிக்கிழமை ரத்து செய்யப்படுகிறது.