தமிழ்ப் பத்திரிக்கையாளரை சிறையில் அடைத்தது சரியே - சொல்கிறார் இலங்கை தூதர்
கொழும்பு: தமிழ்ப் பத்திரிக்கையாளர் திசநாயகத்தை சிறையில் அடைத்தது சரியான செயல்தான் என்று கூறியுள்ளார் ஐரோப்பிய யூனியன் மற்றும் பெல்ஜியத்துக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்கா.
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் மனித உரிமைக் கமிட்டியிடம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அல் கொய்தா நிறுவனம் யாராவது ஒரு ஐரோப்பிய பத்திரிக்கையாளருக்கு பணம் கொடுத்தால் அதை எந்த ஐரோப்பிய நாடாவது நியாயம் என்று கூறுமா. இதை ஐரோப்பிய நாடுகள் விளக்க வேண்டும்.
20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள திசநாயகம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர். அவர்களிடமிருந்து பணம் பெற்ற தீவிரவாத ஆதரவுப் போக்குடன் செயல்பட்டு வந்தவர். ஏராளமான நாடுகளில் தீவிரவாத இயக்கமாக விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என்றார் ஆரியசிங்கா.
சூறாவளியில் முகாம் கூரைகள் சேதம்- தமிழர்கள் அவதி:
இந் நிலையில் இலங்கை அரசு அமைத்துள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளாக வர்ணிக்கப்படும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வீசிய பலத்த சூறாவளி்க் காற்றால் பல முகாம் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன. இதனால் அங்கு தங்கியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட தற்காலிக குடியிருப்புகளின் மேற்கூரைகள் தற்போது சேதமடைந்து விட்டன.
இதன் காரணமாக இங்கு தங்கியுள்ள மக்கள் வெட்ட வெளியில் வசிக்கும் பேரவலத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசுத் தரப்பில் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவற்றுக்கு நலன்புரி கிராமங்கள் என அரசு பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்தவித நலனும் இல்லாத அவலம்தான் இங்கு தற்போது தலைவிரித்தாடுகிறது.












Click it and Unblock the Notifications