இலங்கையில் இந்திய கடற்படை-கூட்டு பயிற்சி
கொழும்பு: இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த 140 பேர் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக இலங்கை அறிவித்த நிலையில் தற்போது இந்தியக் கடற்படை இலங்கை சென்றுள்ளது.
இந்தக் குழுவில் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 140 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஐஎன்எஸ் ஷர்துல், ஐஎன்எஸ் கிருஷ்ணா ஆகிய இந்திய கடற்படைப் போர்க் கப்பல்கள் மற்றும் வருணா என்கிற கடலோரக் காவல் படை கப்பல் மூலம் இவர்கள் கொச்சியிலிருந்து சென்றுள்ளனர். இந்த மூன்று கப்பல்களும் கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 10ம் தேதி வரை இந்த பயிற்சி நீடிக்குமாம்.
ஷர்துல் மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு போர்க் கப்பல்களுமே முன்பு இங்கிலாந்துக் கடற்படையில் இருந்தவை. அவற்றை வாங்கிய இந்தியா தற்போது வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அவற்றைப் பயன்படுத்தி வருகிறது. இரண்டுமே தலா ஒரு ஹெலிகாப்டரை ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை ஆகும்.
இந்தியக் கப்பல்களுடன் இரண்டு இலங்கை கடற்படைக் கப்பல்களும் சேர்ந்து பயிற்சி பெறவுள்ளன. இந்த இரண்டு இலங்கைக் கப்பல்களுமே முன்பு இந்தியாவிடம் இருந்தவையாகும். கடந்த 2000மாவது ஆண்டு இவற்றை இலங்கைக்கு இந்தியா விற்று விட்டது.
கால்பந்துப் போட்டி ...
பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக திரிகோணமலையில் உள்ள ராணுவ மற்றும் கடற்படை பயிற்சி அகாடமிகளுக்கு இந்தியக் குழு செல்லும். மேலும் இரு நாட்டு வீரர்களும் சேர்ந்து கால்பந்துப் போட்டி ஒன்றிலும் ஆடவுள்ளனராம்.
சில மாதங்களுக்கு முன்புதான் இலங்கைக் கடற்படைக்கு, அதி நவீன ரோந்துக் கப்பல் ஒன்றை இந்தியா வழங்கியது என்பது நினைவிருக்கலாம். இந்தியக் கடலோரக் காவல் படையிடம் இருந்து வந்தது இந்தக் கப்பல்.
விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் காரணமாக, இந்தியா- இலங்கை படையினர் இடையே இதுபோன்ற கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட எதுவுமே நடத்தப்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முகாம்கள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு தற்காலிக சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப் போகிறதாம் இலங்கை அரசு. ஏற்கனவே சிலருக்கு இந்த அட்டைகளை கொடுத்து விட்டார்களாம். மற்றவர்களுக்கும் விரைவில் கொடுக்கப்படுமாம்.