கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு- இலங்கை அட்டூழியம்
ராமேஸ்வரம்: இலங்கை ராணுவத்தின் அட்டூழியம் தொடர்கிறது. நேற்று மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் சிலரை கடலில் இருந்து விரட்டியடித்துள்ளது.
இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கும் அவல நிலை தொடர்கிறது. இதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியும் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஆனால், எந்த பயனுமில்லை.
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு நேற்று பட்டினி, பசியால் துடிக்கும் தங்களது குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடலுக்கு திரும்பினர்.
ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 560 படகுகளில் சென்ற அவர்கள் நேற்று மதியம் கச்சத்தீவு பகுதிக்கு அருகே கடலில் வலை விரித்தனர். அப்போது இவர்கள் எப்போது வருவார்கள் என காத்திருந்தது போல் இலங்கை ரோந்து படகுகள் வேகமாக வந்தன.
அவர்கள் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து உயிருக்கு பயந்து மீனவர்களும் தப்பி கரைக்கு வந்து சேர்த்தனர்.
இலங்கை ராணுவத்தின் தொல்லை அதிகமிருப்பதால் சமீபகாலமாக தமிழக மீனவர்கள் மொபைல்களுடன் தான் கடலுக்கு செல்கின்றனர். இதனால் இலங்கை ராணுவத்தை பார்த்தவுடனே மீனவர்கள் தங்களது படகு உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மீன் பிடிக்காமல் திரும்பி வந்துவிட்டனர்.
பல நாட்களுக்கு பின்னர் மீன் பிடிக்க சென்ற அவர்கள் துரத்தியடிக்கப்பட்டதால் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications