மாணவர்கள் மட்டும்தானா? - ஆசிரியர்களும் டிமிக்கி அடிப்பார்கள்!
பெங்களூர்: மாணவர்கள்தான் வகுப்புகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எஸ்கேப் ஆவார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்தக் காலத்தில் ஆசிரியர்களும் கூட வகுப்புகளுக்கு டிமிக்கி அடிப்பதில் கலக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்தப் பள்ளியிலும் 100 சதவீத ஆசிரியர் வருகை என்பது கிடையவே கிடையாது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு துறை நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
ஆசிரியர்கள் வருகையில், முன்னணியில் இருப்பது மேற்கு வங்க மாநிலம். இங்கு 98.1 சதவீத அட்டென்டன்ஸ் உள்ளது. டெல்லி, ஹரியானா மாநிலங்கள் முறையே 95 மற்றும் 91.9 சதவீத ஆசிரியர் வருகைப் பதிவைக் கொண்டுள்ளன.
மற்ற மாநிலங்களில் 70 முதல் 80 சதவீத ஆசிரியர் வருகைப் பதிவே உள்ளது. அஸ்ஸாமில் 55.2 சதவீத ஆசிரியர்கள்தான் முறையாக வகுப்புகளுக்கு வருகிறார்கள். கர்நாடகத்தில் 83.9 சதவீத ஆசிரியர்கள்தான் சரியாக வகுப்புகளுக்கு வந்து பாடம் நடத்தி விட்டுச் செல்கிறார்கள்.
தமிழக ஆசிரியர்களின் வருகைப் பதிவு 89.6 சதவீதமாகும்.
மாணவர் வருகைப் பதிவைப் பொறுத்தவரை, பீகாரில்தான் ரொம்ப மோசம். அங்கு தொடக்கப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு, 42.2 சதவீதம்தான். ஹிமாச்சல் பிரதேச மாணவர்கள் படு நல்லவர்களாக உள்ளனர். 94.6 சதவீத மாணவர்கள் முறையாக வகுப்புகளுக்குப் போகிறார்களாம். கர்நாடகத்தில் வருகைப் பதிவு 86 சதவீதமாக உள்ளது.
ஆந்திராவில் 76.6, டெல்லியில் 73.5 சதவீதமாக வருகைப் பதிவு உள்ளது.
கேரளாவில் 92 சதவீத மாணவர்கள் வகுப்புகளுக்கு சரியாக போகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக் கல்வி மாணவர்கள் 88.3 சதவீதம் பேரும், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 87.8 சதவீதம் பேரும் முறையாக வகுப்புகளுக்குப் போகிறார்கள்.












Click it and Unblock the Notifications