மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னையின் பிரபலமான லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது சக மாணவர்கள் 8 பேருடன் கிராமத்து பம்பு செட்டில் குளித்த காட்சியை செல்போனில் படம் பிடித்த அவர்களது வகுப்புத் தோழர்கள் 9 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
லயோலா கல்லூரியைச் சேர்ந்த விஷூவல் கம்யூனிகேஷன் மாணவ, மாணவியர் சிலர் கல்வி சுற்றுலாவாக காஞ்சிபுரம் மாவட்டம் செஞ்சிவாக்கம் கிராமத்திற்குச் சென்றிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பம்பு செட்டைப் பார்த்த சில மாணவர்கள் குளிக்க ஆசைப்பட்டு குளிக்கச் சென்றனர். அவர்களுடன் ஒரு மாணவியும் குளித்துள்ளார். இந்த 9 பேரும் குளித்ததை சக மாணவர்கள் தங்களிடமிருந்த செல்போன் கேமராக்கள் மூலம் படமாக்கியுள்ளனர்.
இது பின்னர் கல்லூரிக்குள் பரவியுள்ளது. இது கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரியவரவே அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம், குளிப்பதை படம் பிடித்த ஒரு மாணவி உள்பட 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை கூறுகையில், இதுகுறித்து ஆசிரியர்களுக்கு முதலில் தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் வைத்திருந்த செல்போன்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை முடிவடைந்ததும், அவர்களது பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். விசாரணை தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமான நடவடிக்கைதான் இது என்றார்.