ஏர்வாடி தர்கா எப்போது சுற்றுலாத் தலமாகும்?
ஏர்வாடி: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவை சுற்றுலாத் தலமாக மாற்றப் போவதாக அரசு அறிவித்தும், இதுவரை அதுதொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஊர் ஏர்வாடி. இங்குள்ள தர்கா மிகவும் பிரபலமானது. ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு தினசரி வந்து செல்கின்றனர்.
இதையடுத்து ஏர்வாடியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக அறிவிப்பும் வெளியானது.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகியும் கிணற்றில் போட்ட கல்லாகவே இது இருக்கிறது. இதுவரை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை.
ஆண்டுதோறும் ஏர்வாடியில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும். அனைத்து மதங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கூடும் இவ்விழா ஒரு மாதம் வரை நடக்கும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும் தற்போது பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தர்கா நிர்வாகத்தால் பெருமளவில் செலவு செய்ய முடியாத நிலை.
சுகாதாரப் பணிகளுக்கு மட்டும் உள்ளூர் ஊராட்சி நிர்வாகம் பாதி செலவை ஏற்றுக் கொள்கிறதாம்.
இதை சுற்றுலாத் தலமாக அறிவித்தால் சுற்றுலாத்துறையின் முழு உதவிகளும் கிடைக்கும், பக்தர்கலுக்கு பல்வேறு கூடுதல் வசதிகள் கிடைக்கும், தர்கா நிர்வாகம் மற்றும் ஊராட்சிக்கும் வருவாய் அதிகரிக்கும். இப்படிப் பல பயன்கள் உள்ளன.
ஆனால் தற்போது பெரிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாமலேயே இருந்து வருகிறது ஏர்வாடி தர்கா.












Click it and Unblock the Notifications