மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு 10ம் தேதி இலங்கை பயணம்
இலங்கையில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நிலவும் அவலம் குறித்து உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை குறித்து உலக அமைப்புகள் கவலையும், வேதனையும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் அங்குள்ள மக்களின் நிலையை நேரில் கண்டறிய எம்.பிக்கள் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என சமீபத்தில் டெல்லியில் பிரதமரை சந்தித்து திமுக மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் குழு வலியுறுத்தியது.
இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தற்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க டெல்லி முடிவு செய்துள்ளது.
இந்தக் குழுவில் முழுக்க முழுக்க தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகளே இடம் பெறுவார்கள் என்றும் தெரிகிறது.
இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.