நதிகளை இணைப்பது சாத்தியமே-ஜெய்ராம் ரமேஷூக்கு குமரி அனந்தன் பதில்
மதுரை: தேசிய நதிகளை இணைப்பது சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளது அதிர்ச்சி தரும் செய்தியாகும் என்று தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி அனந்தன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில்,
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, கேரள அரசுக்கு புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
மேலும், தேசிய நதிகளை இணைப்பது சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளது அதிர்ச்சி தருகிறது. இந்திய நதிகளை இணைப்பது ஒன்று தான் இந்தியாவை பசியிலிருந்து காப்பாற்றும் என்று ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து 1971லும், 1972லும் வந்த நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நேரு அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் முதற்கொண்டு அறிவார்ந்த தலைவர்கள் எல்லாம் நதிகள் இணைப்பு சாத்தியமே என்று தெரிவித்துள்ளார்கள்.
டெல்லியில் நாங்கள் உண்ணாவிரதம் இருந்த போது கூட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் நதிகளை இணைக்க வேண்டுமென்று கூறிய போது அதை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார்.
தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் இதை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று கூறுவது தேச ஒற்றுமைக்கும், வளமைக்கும் எதிரானதாகும். கங்கை பிரம்மபுத்திரா தொடங்கி நதிகளையெல்லாம் இணைத்து குமரி வரை நீர்வழிப் பாதை அமைத்து விடலாம்.
ஒரு நாடு வளமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் சுமார் 33 சதவீத காடுகளாவது இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் 13 சதவீதமே காடுகள் மட்டுமே உள்ளது.
நிலக்கரியும், எண்ணையும் எப்படி தேசிய சொத்தோ அப்படியே நீரும் தேசிய சொத்து தான். காங்கிரஸ் கூட்டணி தேர்தலின்போது நதிகள் இணைப்பதை குறைந்தபட்ச பொதுத் திட்டமாக அறிவித்துள்ளது என்பதை அமைச்சர் ஜெய்ராம் மனதில் நிறுத்தி பார்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications