தினமலர் செய்தி ஆசிரியர் கைது - கரூர் பிரஸ் கில்டு கண்டனம்
கரூர்: தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியரை அலுவலகத்திற்குள் புகுந்து கைது செய்த போலீசாருக்கு கரூர் பிரஸ் கில்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் பிரஸ் கில்டு கூட்டம் அதன் தலைவர் சிவராமன் தலைமையில், செயலாளர் கே.என்.வடிவேல் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தினமலர் செய்தி ஆசிரியரை கைது செய்ய குறுக்கு வழியில் சென்று தமிழக போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது.
ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சில நடிகைகளின் தயவு தேவை என்பதாலும், சில நடிகர்கள் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதாலும், அவர்களை திருப்திப்படுத்தவும், தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு உதவுவார்கள் என்ற நல்ல நோக்கத்திலும் யாரோ ஒரு சிலர் கொடுத்த மறைமுக பிரஷரால் போலீசார் செயல்பட்டுள்ளனர் என்பது இந்த கைது மூலம் தெள்ள தெளிவாகின்றது.
தமிழக போலீசார் கடந்த சில காலமாக போலீசாரின் மாண்புகளை குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்ற பரவலான குற்றச்சாட்டை உண்மையாக்கும் விதமாக செயல்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் மூலம் ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை திசை திருப்ப போலீசார் செயல்பட்டிருப்பார்களோ என்று எண்ணவும் தோன்றுகின்றது என்ற வாத்தை மறுப்பதற்கு இல்லை.
எனவே, தினமலர் செய்தி ஆசியரை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர் மீது போலீசார் போட்ட வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் இந்திய குடியரசு தலைவர் உடனே தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் இரத்தினம் , சிம்மம் ரவி, தங்கவேல், செல்வராஜ், பரகத், ஆனந்த் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.