பெஷாவரில் பயங்கர குண்டுவெடிப்பு - 41 பேர் பலி

பாகிஸ்தானின் வட மேற்கு நகரம் பெஷாவர். இங்கு இன்று பயங்கர குண்டுவெடித்தது. இதில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சையத் ஜாகிர் அலி ஷா கூறுகையில், இந்த சம்பவத்தில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றார்.
பெஷாவர் நகரின் பிரபலமான கைபர் பஜார் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதி மிகப் பெரிய மார்க்கெட் ஆகும். இந்த இடத்திற்கு அருகில்தான் பெஷாவர் உயர்நீதிமன்றம், வட மேற்கு எல்லைப்புற மாகாண சட்டசபை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.
குண்டுவெடிப்பு நடந்தபோது சட்டசபைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
இந்த சம்பவத்தில் ஒரு மினி பஸ் கவிழ்ந்து விழுந்தது, 3 டூவீலர்கள் வெடித்துச் சிதறி விட்டன. 3 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாதிகளே காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களில் பெஷாவரில் நடக்கும் 2வது குண்டுவெடிப்புச் சம்பவம் இது. கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications