அதிமுகவின் 38வது ஆண்டு விழா

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொடங்கி 37 ஆண்டுகள் நிறைவடைந்து, 38வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளிலும், அதிமுக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக் கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப் படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் அதிமுகவின் 38 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெ. மாலை:
இந் நிலையில் அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 37 ஆண்டுகள் நிறைவடைந்து, வரும் 17ம் தேதி 38வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், அன்று காலை 10.30 மணி அளவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு, இனிப்பு வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும் கலந்து கொள்கிறார்கள்.
கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி, அதிமுகவின் 38வது ஆண்டு தொடக்க நாள் விழாவினை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று நான்கு மாத கொடநாடு வாசத்திற்குப் பின்னர் ஜெயலலிதா சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications