முல்லை பெரியாறு: 'உடனே விசாரிக்க வேண்டியதில்லை'
சென்னை: முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய வனத்துறை அனுமதி அளித்ததை எதிர்க்கும் தமிழகத்தின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை கேரள அரசு அமல்படுத்த மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு அக்டோபர் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய வனத்துறை கேரளத்துக்கு அளித்த அனுமதியை எதிர்த்தும், இந்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 3 தினங்களுக்குமுன் வழக்கு தொடர்ந்தது.
20ம் தேதி இந்த விவகாரத்தின் பிரதான வழக்கு விசாரணைக்கு வருவதால் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என்று நீதிபதிகள் ஜெயின், தத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறிவிட்டது.
அதற்குள்ளாக புதிய அணைக்கான பணிகளில் எதுவும் நடந்துவிடாது என்றும் நீதிபதிகள் கூறினர்.