நடிகர்கள் மீது நடவடிக்கை எப்போது? - கமிஷனர் விளக்கம்
சென்னை: பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசிய நடிகர்கள், நடிகை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் அவதூறு செய்தி வெளியிட்டதாக தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த செய்தி வெளியிட்டது தொடர்பாக நடிகர் சங்கத்தில் கண்டனக் கூட்டம் ஒன்று நடந்தது.
அப்போது பேசிய நடிகர்கள், நடிகைகள் படு ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 8ம் தேதி சென்னையில் குழுமிய பத்திரிக்கையாளர்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மற்றும் ஆதார வீடியோவையும் கொடுத்தனர்.
இதன் மீதான முன்னேற்ற நடவடிக்கை குறித்து ஆணையரிடம் கேட்டபோது,
புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களது கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.