தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை-சிபிஐ கோரிக்கை
நாகப்பட்டிணம்: தமிழகத்தில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருப்பது நியாயமானதல்ல.
இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, எவ்வித குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் என சட்டம் உள்ளது. எனவே, இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க எந்தத் தடையும் இல்லை.
அதே நேரத்தில் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை மட்டும் வழங்கினால், அவர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற முடியாத நிலை ஏற்படும். எனவே, இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சே கூட இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்தான்.
இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க சட்டம் உள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவது தடுக்கப்படவில்லை எனில் மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும் என்றார் பாண்டியன்.