இலங்கை பயணம்: கோட்சே விருந்துக்கு காந்தி சீடர்களைக் கூப்பிடுவது போல உள்ளது - வைகோ
நெல்லை: இலங்கை அதிபர் ராஜபக்சேயை தமிழக எம்பிக்கள் குழு சந்திப்பது அவமானம். கோட்சே வைக்கம் விருந்துக்கு காந்தியின் சீடர்களைக் கூப்பிடுவது போல இது என்று வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ..
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஐந்தரை மாதங்களாக மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைபட்டு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். இவர்களை சந்திப்பதற்கு அதிபர் ராஜபக்சே தமிழக எம்பிக்கள் குழுவை அழைத்துள்ளார்.
தமிழினத்தை கொலை செய்த அவரை தமிழக எம்பிக்கள் சந்திப்பது அவமானம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தத்தை நடத்தியது காங்கிரஸ். இதற்கு திமுக உறுதுணையாக இருந்தது. யுத்தத்தை தடுக்க வேண்டியவர்கள் அப்போது கபட நாடகம் ஆடினர்.
இலங்கையில் தமிழக எம்பிக்கள் குழு செல்வது ஒரு கண்துடைப்பு நாடகம். ராஜபக்சே தமிழக எம்பிக்களை அழைப்பது காந்தியின் சீடர்களை கோட்சே விருந்துக்கு அழைப்பது போல் உள்ளது என்றார் வைகோ.