போலி வக்கீல்-மதுரை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
மதுரை: வக்கீ்ல் என பொய் சொல்லி நீதிமன்றங்களில் வாதாடிய சட்ட கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மதுரையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
சமீபத்தில் மதுரை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தான் வழக்கறிஞர் என கூறி வாதாடி வந்தது மற்ற வக்கீல்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி என்ற அந்த மாணவரை பார் கவுன்சில் நிர்வாகிகள் கையும், களவுமாக பிடித்து அண்ணாநகர் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் என்பவரின் உத்தரவின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியில் வந்த அந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தி திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இதனால் ஆவேசமடைந்த மதுரை வாக்கீல்கள் போலி வக்கீலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர் தப்பி செல்ல காரணமாக இருந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரி வக்கீல்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்பட்டது.