தூத்துக்குடியில் ஒரு 'அத்திப்பட்டி': கிராமத்தை காணவில்லை-கலெக்டரிடம் மனு!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பொதுமக்கள் சுமார் 100 பேர் திரண்டு ஒரு கிராமத்தை காணவில்லை என மாவட்ட கலெக்டரிடம் 'சிட்டிசன்' பட பாணியில் புகார் கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி என்ற கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் பால் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பொன் கருப்பசாமியின் தலைமையில் திரண்டு மாவட்ட கலெக்டர் பொறுப்பு வகித்து வரும் துரை. ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சங்கரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட புலிப்பாஞ்சன் கிராமத்தில் வறட்சி காரணமாக விவசாயத் தொழில் முடங்கி விட்டது.
இதனால் இந்த கிராமத்தில் வசித்தவர்கள் வெளியேறி அருகில் உள்ள தாளமுத்துநகர், முத்தம்மாள் காலனி போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த கிராமமே காலியாகி, மாவட்ட வரைபடத்தில் மட்டுமே உள்ளது.
இதையடுத்து, 247.10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராம நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்துள்ளனர். அதேபோல் 137.36 ஏக்கர் கொண்ட புலிப்பாஞ்சன் குளத்தையும், 102.11 ஏக்கர் கொண்ட நித்யகல்யாணி குளத்தையும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கியுள்ளனர்.
இந்த இரண்டு குளங்களும் காணாமல் போனதால் கால்நடைகளுக்கு நீரும், தீவனமும் இல்லாமல் நாங்கள் வாடி வருகிறோம்.
புலிப்பாஞ்சன் கிராமம், புலிப்பாஞ்சன் குளம், நித்யகல்யாணி குளம் ஆகியவற்றைக் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்.
போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தூத்துக்குடி- எட்டையபுரம் சாலையில் சங்கரப்பேரி கிராம மக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications