இன்று சுனாமி எச்சரிக்கை 'டிரில்'!-18 நாடுகள் பங்கேற்பு
டோகியோ: சுனாமியை முன்னதாக அறிந்து எச்சரிக்கை வழங்கும் சோதனை இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் நடத்தப்படுகிறது. ஐநா சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில் இந்தியா, இந்தோனேசியா உட்பட 18 நாடுகள் பங்கேற்கின்றன.கடந்த 2004ம் டிசம்பர் 26ம் தேதி இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர சுனாமிக்கு இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்தை சேர்ந்த லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.
இதையடுத்து மீண்டும் இது போல் ஒர் சம்பவம் ஏற்பட்டால் அப்போது கடலோர பகுதி மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த திட்டத்தை யுனெஸ்கோ வகுத்துள்ளது.
இந்த சோதனைக்கு 2009 இந்திய பெருங்கடல் அலை சோதனை (Exercise Indian Ocean Wave 09) என பெயரிட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு வட மேற்கே 9.2 ரிக்டர் அளவுக்கு கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் உடனடியாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டால் இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகள் மக்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துகின்றன என்ற வகையி்ல் இந்த டிரில் நடக்கிறது.
இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு இந்த 'சுனாமி எச்சரிக்கை' விடுக்கப்பட்டது. டோகியோவில் உள்ள ஜப்பான் புவியியல் மையம் மற்றும் ஹவாய் பசிபிச் சுனாமி எச்சரிக்கை மையம் ஆகியவை இந்த 'எச்சரிக்கையை' மற்ற நாடுகளுக்கு அனுப்பின.
இந்த இரு மையங்கள் மூலம் தான் தற்போது சுனாமி எச்சரிக்கை அதிகம் விடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா பகுதியில் அமைக்கப்பட இருக்கும் மையங்கள் இவற்றுக்கு மாற்றாக செயல்படும்.
இந்த சுனாமி எச்சரிக்கை அமைப்பின் முக்கிய நோக்கம், கடற்கரை பகுதியை சுனாமி தாக்குவதற்கு 45 நிமிடங்கள் முன்பாக அதை கண்டுபிடித்து மக்களை மேடான பகுதிகளுக்கு வெளியேற்றுவது தான்.
இந்த சோதனையின் மூலம் இத்திட்டத்தில் இருக்கும் சிறு சிறு குறைபாடுகளை கண்டறிந்து நீக்கும் நோக்கத்தில் விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் சமாவோ தீவில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து இந்த சோதனைக்கு ஐநா விரைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மௌரிசியஸ், மொசம்பிக், மியான்மர், ஒமன், பாகிஸ்தான், சிசிலிஸ், சிங்கப்பூர், தான்சானியா, கிழக்கு திமோர் உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்கின்றன.
இன்று சர்வதேச பேரழிவு தவிர்ப்பு தினத்தையொட்டி இந்த சோதனையை ஐ.நா. நடத்துகிறது.