தீபாவளி: 1000 சிறப்பு பஸ்கள்- நாகர்கோவில், கும்பகோணத்திற்கு சிறப்பு ரயில்
சென்னை: தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோவில், கும்பகோணத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் (எண் 0601) 19ம் தேதி இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் இன்னொரு சிறப்பு ரயில் (எண் 0605) 19ம் தேதி இரவு 10.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 1 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து 20ம் தேதி மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு (எண் 0602) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
கும்பகோணத்துக்கு..
சென்னை சென்டிரலில் இருந்து கும்பகோணத்திற்கு செல்லும் சிறப்பு ரயில் (எண் 0627) 17ம் தேதி இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.25 மணிக்கு கும்பகோணத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 18ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு (எண் 0628) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
1000 சிறப்பு பஸ்கள்:
இந் நிலையில் அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து இன்று 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகர்கோவில், திருநெல்வேலி, கும்பகோணம், சிதம்பரம், ஓசூர், நாமக்கல், தர்மபுரி, திருவாரூர், நாகப்பட்டினம், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெங்களூர், கிருஷ்ணகிரி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு தேவையில்லை. நாளையும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
விமான கட்டணங்களும் உயர்ந்தன:
தீபாவளிக்கு ரயில்கள், பஸ்களில் இடமில்லாத நிலையில் விமானங்களிலும் டிக்கெட்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கட்டணங்களை தனியார் விமான நிறுவனங்கள் தாறுமாறாக உயர்த்தியுள்ளன.
பொங்கல்-கிறிஸ்துமஸ்-புத்தாண்டுக்கும் டிக்கெட் இல்லை:
இந் நிலையில் முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில், பொங்கல் தினத்துக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கும் எந்த ரயில்களிலும் டிக்கெட் இல்லை.
ரயில்களில் 90 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்ற நிலையில் நேற்று பொங்கல் தினத்தையொட்டிய ஜனவரி 12ம் தேதிக்கான ரயில்களுக்கு முன் பதிவு தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன. நேற்று காலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால் கவுண்டர்களில் வந்து வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தவர்களுக்கு பெரும்பாலும் டிக்கெட் கிடைத்துவிட்டது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி சூப்பர் பாஸ்ட், பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் என அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
அதே போல டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில் அந்த தினத்தையொட்டி நாட்களிலும் எந்த ரயிலிலும் இடம் இல்லை. அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டன.
மேலும் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாட்களிலும் ரயில்களில் இடம் இல்லை.
விரைவில் சென்னை-மதுரை பகல் நேர எக்ஸ்பிரஸ்:
இந் நிலையில் சென்னை- மதுரை இடையே விரைவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் உள்ளதால், விரைவில் பகல் நேர ரயில் இயக்கப்படும்.
சென்னை- செங்கோட்டை இடையே தற்போது இயக்கப்படும் வாராந்திர ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications