மெளன்ட் ரோட்டில் 'மின்னலா'? ரூ. 1500 அபராதம்!
சென்னை: சென்னை அண்ணா சாலையில், படு வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றால் இனி ரூ. 1500 அபராதம் கட்ட வேண்டும்.
மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது சென்னையில் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள் முதல் ஆட்டோ, கார் என அனைத்து வாகனங்களுமே ராக்கெட் வேகத்தில்தான் சீறிப் பாய்கின்றன.
குறிப்பாக ஆட்டோக்கார புண்ணியாத்மாக்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அதேபோல பள்ளிக்கூட வேன்களும் கூட இப்போதெல்லாம் மகா மோசமான வேகத்தில்தான் செல்கின்றன. கேட்டால், பள்ளிக் கூடத்திற்கு நேரமாகி விடும் என்று காரணம் கூறுகிறார்கள். மீறிக் கேட்டால், பள்ளிக் கூட பிள்ளைகள் இருக்கும் வண்டியை மறித்து பிரச்சினை செய்கிறாயா என்று கேட்டு சண்டைக்கு வந்து விடுகிறார்கள்.
பெரும்பாலும் இவர்களை போக்குவரத்துப் போலீஸார் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இவங்க எப்பவுமே இப்படித்தான் என்பது போல கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.
இதனால் விபத்துக்கள் அதிகரித்து விட்டன. இதையடுத்து தற்போது அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு கடிவாளம் போட களம் இறங்கியுள்ளது காவல்துறை.
போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக அண்ணாசாலையில் வருகிற 19-ந்தேதி முதல் போக்கு வரத்து விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
அண்ணாசாலையில் பெரியார் சிலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரை உள்ள பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அண்ணாசாலையில் உள்ள சிக்னல்களில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுகிறார்கள்.
காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ஷகில்அக்தர் போக்குவரத்தை சீர்படுத்துவற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்துவதற்குள் பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும் அதி வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வோரிடம் ரூ. 1500 அபராதமும் வசூலிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications