கொஞ்சம் கூட மதிக்காத இலங்கை-மனித உரிமை அமைப்பு
பிரஸ்ஸல்ஸ்: அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கைகளை கொஞ்சம் கூட மதிக்கவில்லை, பதிலளிக்கவும் இல்லை என்று இலங்கை அரசு மீது காட்டமாக பாய்ந்துள்ளார் மனித உரிமை அமைப்பின் தலைவர் நவி பிள்ளை.
பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதை நாங்கள் மட்டுமல்ல, ஐ.நா. பொதுச் செயலாளரும் கூட விடுத்து வருகிறார். ஆனால் எதையுமே சட்டை செய்வதாக இல்லை இலங்கை அரசு.
போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அதிபர் அளித்த உறுதிமொழிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக இலங்கை அதிபர் விளக்கமளிக்க வைக்க வேண்டும் எனவும் பொதுச் செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளோம்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் அறிய விரும்புகிறோம்.
முன்பு இலங்கையில், பல்வேறு என்ஜிஓக்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டபோது பல்வேறு விசாரணைக் குழுக்களை இலங்கை அரசு அமைத்தது. தற்போது அவற்றையெல்லாம் அவர்கள் கைவிட்டு விட்டார்கள். இதையும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.
மிகத் தீவிரமான குற்றச்சாட்டுக்களைக் கூட இலங்கை அரசு மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தற்போது என்ன மாதிரியான முறையில் விசாரணைகள் அமைய வேண்டும் என்பது குறித்து பொதுச் செயலாளருடன் நான் ஆலோசித்து வருகிறேன். ஆனால் எனது யோசனைகளையெல்லாம் இலங்கை அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பதுதான் இதில் முக்கியமானது.
ஐ.நா. மனித உரிமை தலைவரை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாகவும், ஐ.நா. பொதுச் செயலாளரிடத்திலும் இலங்கை கூறி விட்டது. எனவே நான் அங்கு செல்லும் கேள்விக்கே இடமில்லை என்றார் நவி பிள்ளை.