மனித உரிமையை மீறும் டெல்லி போலீஸ்-கிருஷ்ணசாமி
சென்னை: இலங்கை தூதரகம் முன் சில பூந்தொட்டிகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வீடுகளுக்குச் சென்று டெல்லி போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண அரசியல் நடவடிக்கைக்காக எங்கள் தொண்டர்களை தீவிரவாதிகளை தேடுவது போல் டெல்லி போலீசார் நடந்து கொள்வது மனித உரிமையை மீறும் செயலாகும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு கிடக்கும் 3 லட்சம் தமிழ் அகதிகளை அவர்கள் வாழும் இடங்களுக்கு அனுப்ப வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி டெல்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அப்போது தமிழ் இளைஞர்கள் சிலர் அங்குள்ள இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உணர்ச்சி வேகத்தில் சில பூந்தொட்டிகளை உடைத்திருக்கிறார்கள்.
இதற்காக என் மீதும் கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண வழக்கு தான். ஆனால், ஏதோ தீவிரவாதிகளை தேடுவது போல் டெல்லியில் இருந்து 20 போலீசார் தமிழகத்திற்கு வந்து முகாமிட்டு தேடி வருகிறார்கள். அத்துடன் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வீடுகளுக்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண அரசியல் நடவடிக்கைக்காக டெல்லி போலீசார் இவ்வாறு நடந்து கொள்வது மனித உரிமையை மீறிய செயல் ஆகும்.
இலங்கையில் 58,000 பேரை சொந்த ஊருக்கு அனுப்புவது ஏற்கனவே இலங்கை அரசு எடுத்த முடிவாகும். கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற இடங்களுக்கு இந்த குழுவினர் செல்லவில்லை.
எனவே, இந்திய அரசு அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும். முள்வேலிக்குள் முடங்கி கிடக்கும் இலங்கை தமிழர்களை பாதுகாக்கவும், இலங்கை தமிழர்களின் ஒட்டு மொத்த விடுதலைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் ஜனவரி மாதம் கோவையில் உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications