சீனாவை இந்தியா எதிர்க்கும்போது கேரளாவை ஏன் தமிழகம் எதிர்க்கக் கூடாது - ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
மத்திய நீர்வளத்துறை அமைச்சரால், கடந்த 1996ம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்று என் அறிக்கையில் எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை.
என் அறிக்கையை முழுவதுமாகப் படித்து புரிந்து கொள்ளாமல், கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரம் துண்டிக்கப்பட்டு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகி விடும். இதனால், லட்சக்கணக்கான நம் மக்கள் பாதிக்கப்படுவர். குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
கருணாநிதி டெல்லியில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதுவதன் மூலமோ, என் மீது வசைமாரி பொழிந்து நேரத்தை வீணாக்குவதன் மூலமோ அல்லது தன் நடவடிக்கையை நியாயப்படுத்துவதன் மூலமோ, பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கப் போவதில்லை.
நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களில், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதற்காக பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனாவிற்கு உட்பட்ட பகுதியில் சீனா அணை கட்ட இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நதிநீரை பங்கிட்டுக் கொள்ளும் விஷயத்தில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, அண்டை மாநிலங்களுடான நதிநீர் பங்கீட்டு பிரச்னை குறித்து வழக்கை துரிதப்படுத்தவும், தன் உரிமைக்காக போராடவும், நியாயமான காரணங்கள் தமிழகத்திற்கு இல்லையா?
கேரளாவும், தமிழகமும் இந்திய தேசியத்திற்கு உட்பட்ட மாநிலங்கள் தானே? ஒரே மாதிரியான பிரச்னையில் இந்திய தேசத்திற்கு ஒரு அளவுகோலையும், தமிழகத்திற்கு ஒரு அளவுகோலையும் பிரதமரும், மத்திய வனத்துறை இணை அமைச்சரும் கடைப்பிடிக்கலாமா? இது நியாயமா?
தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிரான புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருவதில் 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. எஞ்சியுள்ள பணிகளும் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும் என்று அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட கேரள அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
இதைத் தடுத்து நிறுத்த பிரதமரிடமும், வனத்துறை இணை அமைச்சரிடம் தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக கருணாநிதியே ஒப்புக் கொண்டு விட்டார்.
கருணாநிதியின் கடிதங்களுக்கு அவர்கள் பதில் கூட அளிக்கவில்லை என்பதையும் கருணாநிதி ஒப்புக் கொண்டு விட்டார். இருப்பினும், மத்திய கூட்டணி அரசிலிருந்து தி.மு.க., கட்சியை விலக்கிக் கெள்ள கருணாநிதி எதையும் செய்ய மாட்டார்.
தமிழக மக்கள் கையில் தான் இந்த வழக்கு தற்போது இருக்கிறது. இதற்குத் தீர்ப்புக் கூற வேண்டியவர்கள் தமிழக மக்கள் தான் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications