ஈரானில் தீவிரவாத தாக்குதல்: 35 கமாண்டோக்கள் பலி
தெஹ்ரான்: ஈரானில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலைத் தாக்குதலில் அந் நாட்டு சிறப்பு பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், அதிகாரிகள், பழங்குடியினத் தலைவர்கள் உள்பட 35 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.
ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிஷீன் என்ற இடத்தில் நடந்த ஈரான் ராணுவத்தின் புரட்சிகர கமாண்டோ சிறப்புப் படைப் பிரிவு அதிகாரிகளின் கூட்டத்தைக் குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் நாடாளுமன்றத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என அந் நாட்டு அதிபர் அகமதிநிஜாத் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சன்னி இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஜூன்துல்லா தான் இத் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறியுள்ள அகமதிநிஜாத், இத் தாக்குதலுக்கு திட்டமிட்ட குற்றவாளிகளை பாகிஸ்தான் உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இலங்கை அதிபருடன் ஈரான் அமைச்சர் சந்திப்பு:
இந் நிலையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சர் மொட்டாக்கி சந்தித்துப் பேசினார்.
இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்வதோடு அந் நாட்டில் சில நீர் மின் திட்டங்களை ஈரான் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.