அரசியல்வாதிகள் ட்விட்டரை பயன்படுத்த தரூர் பிரசாரம்
வெளியுறவுத்துறை இணை அமைச்சராக எதையாவது செய்கிறாரோ இல்லையோ ட்விட்டர் மூலமாக எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் தரூர்.
விமானங்களில் எக்கானமி வகுப்பை மாட்டுத் தொழுவம் என்று கூறி பெரும் சலசலப்பை முதலில் ஏற்படுத்தினார். பின்னர் எனது வேலைப்பளுவை நினைத்தால் பெரும் கேலிக்கூத்தாக உள்ளதாக இன்னொரு செய்தியை அனுப்பி சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்த நிலையில் ட்விட்டரை அனைத்து அரசியல்வாதிகளும் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரத்திலேயே இப்போது இறங்கி விட்டார்.
இதுகுறித்து நியூயார்க்கில் நடந்த ஆன்லைன் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், இந்திய அரசியல்வாதிகள் ட்விட்டரின் அருமையான சேவை மிகவும் தேவை. அதை அவர்கள் அதிக அளவில் பயன்படுத்த முன்வர வேண்டும்.
ஆனால் நான் ட்விட்டர் மூலமாக தெரிவித்த சில கருத்துக்கள் அவர்கள் ட்விட்டர் பக்கம் திரும்ப இடையூறாக அமைந்து விட்டது வருத்தம் தருகிறது.
இருப்பினும் எதிர்காலத்தில் நமது அரசியல்வாதிகள் பெருமளவில் ட்விட்டரை பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். ஒரு அரசியல் தலைவரின் பிசியான வேலைப்பளுவுக்கு ட்விட்டர்தான் கருத்துக்களைத் தெரிவிக்க சரியான ஊடகமாகும்.
தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க நேரம் இல்லாமல் போகும்போது அவர்களுக்கு ட்விட்டர் மிகச் சரியான துணைவனாக விளங்கும் என்றார் சசி தரூர்.
ட்விட்டர் ரசிகர் மன்றத்தை யாராவது ஆரம்பித்தால் அதற்கு தரூரை தலைவராகப் போட்டு விடலாம்.