For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் கூட்டத்தி்ல் கண் கலங்கிய வைகோ

Google Oneindia Tamil News

பெங்களூர்: இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போருக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததே மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

பெங்களூர் கர்நாடக த்தமிழ் மக்கள் இயக்கத்தின் ஸ்ரீராமபுரம் கிளை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு இயக்கத்தின் தலைவர் இராசன் தலைமை தாங்கினார். ஈழ விடுதலை உணர்வை மக்களிடத்தில் ஊக்குவிக்கும் வகையில் மாரி தலைமையில் கலை நிகழ்ச்சிகளும், சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், புலவர்களின் பாட்டரங்கமும் நடைபெற்றன.

மாநாட்டில் பேராசிரியர் ருக்மணி, இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அவல நிலை குறித்தும், பெண்கள், குழந்தைகள் படும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதணைகள் குறித்தும் விளக்கினார்.

இராசன் பேசுகையில், உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு ஈழ விடுதலையை வென்றெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்றிலேயே இது ஒரு பொன்னான காலம். பிரபாகரன் உலகத் தமிழர்களையெல்லாம் ஒருங்கிணைத்துள்ளார். அவரை பின்பற்றி நாம் இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய வைகோ,

இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு அந்நாட்டில் பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் தமிழர்களின் சம உரிமை பறிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்களர்கள் வன்முறையை துவங்கினர்.

அதைத் தொடர்ந்து துவங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆதரித்தனர். அங்குள்ள தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தொலைநோக்குப் பார்வையுடன் விடுதலைப் போராளிகளுக்கு உதவினர்.

அதேபோல வாஜ்பாய் ஆட்சிகாலத்திலும் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக ஆட்சியில் இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்ய மாட்டோம் என்பதில் வாஜ்பாய் உறுதியாக இருந்தார்.

ஆனால் மன்மோகன் சிங் தலைமையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்ததும் இலங்கையில் போராளிகளையும் அப்பாவித் தமிழர்களையும் ஒழிக்க அந்நாட்டுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது. இலங்கையுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்து, இலங்கைத் தமிழர்களை குண்டுவீசிக் கொல்ல உதவி செய்தது.

அங்கு லட்சக்கணக்கான பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் அணு அணுவாகக் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கப் போரை நிறுத்த உலக நாடுகளும், ஐ.நா சபையும் வலியுறுத்தியும் போரை அதிபர் ராஜபக்சே நிறுத்தவில்லை.

எல்லை பிரிவினைவாதத்தில் மட்டும் எதிரிகளாக இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கைத் தமிழர்களைக் கொல்ல நேரடியாக ஆயுத உதவிகளை செய்தன.
இந்தியர்கள், தமிழகத் தமிழர்களின் வரிப் பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கைக்கு இந்தியா வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம்.

போர் முடியும் வரை இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தது இந்தியா. தமிழக முதல்வர் கருணாநிதியும் போரை நிறுத்துமாறு கோரவில்லை. போரை நிறுத்த இந்தியா ஏன் வலியுறுத்தவில்லை என்று பார்த்தால், அந்த போரை வெற்றிகரமாக நடத்த திட்டம் வகுத்துக் கொடுத்ததே காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்று தெரியவந்தது.

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்ததை பிரதமர் மன்மோகன் சிங், எனக்கு அக்டோபர் 2ம் தேதி எழுதிய கடிதத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இலங்கைப் பிரச்னையில் தொலைநோக்குப் பார்வையின்றி மிகப்பெரிய வரலாற்று தவறு செய்துவிட்டது. காங்கிரஸ் அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இலங்கையால் இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்.

16 வயது தமிழ்ப் பெண்ணின் கற்பு சிங்கள வெறியர்களால் சூறையாடப்பட்டது. அதை மறைக்கும் விதத்தில் அவர்கள் செய்த ஒரு செய்கையை பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அந்த அறிக்கையை தமிழில் சொல்லவே நா கூசுகிறது. அதை ஆங்கிலத்தில் சொல்கிறேன். 'A GRANADE WAS EXPLODED IN HER VAGINA' என்று சொல்லிவிட்டனர் அந்த பிரேத அறிக்கையில்.

பலாலி விமானதளம் புதுப்பிக்கும்போதே நான் இந்திய அரசைக் கண்டித்தேன். தமிழகத் தமிழர்களின் எந்த எதிர்ப்பையும் பற்றிக் கவலைப்படாமல் ரேடார், அதை இயக்க வல்லுனர்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள், அனைத்தயும் சிங்களவனுக்கு அளித்து அவற்றையெல்லாம் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டது மத்திய அரசு.

அது மட்டுமல்லாது இந்திய அதிகாரிகளின் நேரடி ஆலோசனை, ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம், ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ரகசிய கண்கானிப்பு உதவி, செயற்கைகோள் புகைப்படங்கள் என்று தன்னால் எவ்வளவு முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்து நம் தமிழினத்தின் அழிவிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு.

இந்தக் கொடுமைப் பார்க்க மனம் சகியாமல் தீக்குளித்து இறந்த நம் தோழர்களைக் கண்டு கொதித்தெழுந்த உணர்வுத் தீயை சூழ்ச்சியால் அடக்கினார் கருணாநிதி. நாஜிப்படைகள் செய்யாத கொடுமைகளை தமிழர்களுக்கு எதிராக இந்திய, இலங்கை அரசுகள் செய்துள்ளன.

இது இன்று நேற்றல்ல திலீபன், புலேந்திரன், குமரப்பா, கிட்டு உயிர்த் தியாகத்திலும் இந்திய அரசுக்கு பங்கு உண்டு. இவ்வளவு தூரம் தமிழர்களுக்கு கொடுமை இழைத்த சோனியா காந்தி 'முசோலினி பெற்ற பிள்ளை'.

ஐநா, ஐரோப்பிய யூனியன், அம்னெஸ்டி மற்றும் உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் இலங்கையில் 'இனப் படுகொலை' நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளன இந்தியாவைத் தவிர.

தமிழ் ஈழப் போராட்டமும் கனவும் அழிவதற்கு நாம் வாய்ப்புக் கொடுத்துவிடக் கூடாது. உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் இதுவரை செய்திராத அளவு மிக கட்டுக்கோப்பான பாதுகாப்பான சுதந்திரமான ஒரு அரசாங்கத்தை தம்பி பிரபாகரன் அமைத்தார். முப்படைகளும் கொண்ட ஒரே விடுதலை இயக்கமாக சிங்களவனுக்கு எதிரான போரை நடத்தி வந்தார். அவர் இன்னும் உயிரோடுதான் இருருக்கிறார். தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் கூட இதை உறுதி செய்திருக்கிறார். பிரபாகரன் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஈழப் போராட்டத்தை தொடர்வார்.

இலங்கைக்கு அண்மையில் சென்ற திமுக அணி எம்.பிக்கள் குழு, தமிழர் பிரச்னையை பேசாமல் ராஜபக்சேவுடன் சிரித்து பேசி வந்தது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் ஈழ விடுதலை ஆதரவாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றார்.

தமிழர்கள் மீது சிங்களர்கள் கையாண்ட அடக்குமுறை, கடத்தல், வீடுகள் சூறையாடப்பட்டது, குழந்தைகள், பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிகள் சிங்கள வெறியர்களிடம் பட்ட கொடுமைகளை விவரிக்கும் போது வைகோவின் நா தழுதழுத்து கண்கள் கலங்கின.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X