இது ஒரு இனிய உணர்வு-கருணாநிதி பெருமிதம்
சென்னை: இதுவரை உலகின் பல பகுதிகளில் நடந்த 8 மாநாடுகளும் உலகத் தமிழ் மாநாடுகள். இப்போது கோவையில் நடக்க இருப்பதோ நம் மொழிக்குச் செம்மொழி எனும் சிறப்பும் கலந்த 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:
தீபாவளியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், ஏன் அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையிலே கூட இரவு எட்டு மணி வரையில் தலைமைச் செயலகத்தில் உலகத்தமிழ் மாநாட்டிற்கான பல்வேறு குழுக்களை அமைப்பது குறித்தும்- கட்சி வேறுபாடின்றி இந்த மாநாட்டினை நடத்திட வேண்டுமென்ற நோக்கத்தோடு சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தேன்.
இந்த மாநாடு குறித்து தொடர்ந்து நான் பல கடிதங்கள் எழுதவிருக்கிறேன் என்ற போதிலும், இப்போது இந்தக் கடிதம் எழுதுவதின் நோக்கம், 1968ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்து ஜனவரி திங்களில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு முன் நான் ஆற்றிய வானொலி உரையை இந்தக் கடிதத்தின் மூலமாக நினைவூட்டிடலாம் என்பதுதான். இதோ அந்த உரை:
கீழ்த்திசை மொழி வல்லுநர் கழகத்தின் 26வது கூட்டம் 1964ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்றதன் தொடர்பாக தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள அறிஞர் பெருமக்கள் சிலர் பன்னாட்டறிஞர் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினர்.
பன்னாட்டறிஞர் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் முதல் உலகத் தமிழ்க் கருத்தரங்கு 1966ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் கோலாலம்பூரில் நடைபெற்றது. இரண்டாவது கருத்தரங்கு தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரில் 1968ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது.
கருத்தரங்கு 3ம் தேதி தொடங்குகிறதேயெனினும், ஜனவரி முதல் நாளிலேயே மாநாட்டில் தொடக்கத்திற்கான மணிமகுடம் தமிழ்த் தாய்க்குச் சூட்டப்படுகிறது. ஆம்! அன்றுதான் தமிழக முதல்வர் அண்ணாவின் திருவுருவச் சிலையை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கிட, பெருந்தகையாளர் ஏ.ராமசாமி முதலியார் தலைநகரில் திறந்து வைக்கிறார்.
ஜனவரி 2ம் நாள் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன் வருகிறார்.
கடற்கரையில் தமிழை வளர்த்த சான்றோர்க்கும், ஆன்றோர்க்கும் சிலைகள் எடுக்கும் விழா சீர்மேவ சிறப்போங்க நடைபெறவிருக்கிறது.
ஜனவரி முதல் இரண்டு நாட்களில் தகைமையாளர்களின் சிலைகளை தலைநகரில் அமைப்பது கண்கொள்ளா காட்சி. இந்தக் காட்சிகளை வென்றிடும் விதத்தில் மறுநாள் பவனி ஒன்று தலைநகரில் நடைபெறும். 26 அலங்கார வண்டிகள் கலந்து கொள்ளும் அந்தப் பவனியில் தமிழரின் மொழி, நாகரிகம், கலை, பண்பாடு, வாழ்க்கை முறை முதலியவற்றை சித்தரித்துக்காட்டும் காட்சிகள் இடம் பெறும்.
இந்த அலங்கார வண்டிகளுக்கு இடைவெளிகளில் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், மாணவிகளும்- ஆசிரியர்களும், ஆசிரியைகளும் - சீரணித் தொண்டர்களும் சீருடை அணிந்து மாநாட்டுக் கொடியேந்தி செல்வார்கள்.
ஊர்வலக் காட்சியினை புறங்காணும் வகையில் நீலத்திரைக் கடல் ஓரத்தில் உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழா நடைபெறும். கடல் அலையா? காண வந்த மக்கள் தலையா? என ஐயுறும் வண்ணம் லட்சோப லட்சம் மக்கள் வெள்ளமென திரளுகிற கூட்டத்தில் குடியரசு தலைவர் உலகத் தமிழ் மாநாட்டுத் தொடக்க விழா பேருரையை நிகழ்த்துவார். தமிழக ஆளுநர் உஜ்ஜல் சிங் மாநாட்டு மலரினை வெளியிடுவார்.
இந்தத் திருவிழாவிற்கு தலைமை ஏற்பவர் தமிழகத்தின் முதல்வர் அறிஞர் அண்ணா ஆவார்.
ஜனவரி 4ம் நாள் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கருத்தரங்கு தொடங்கும். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 28 பிரதிநிதிகளும், இலங்கையிலிருந்து 12 பிரதிநிதிகளும், தமிழ்நாட்டிலிருந்து 150 பிரதிநிதிகளும், தமிழ்நாடு நீங்கிய ஏனைய இந்திய மாநிலங்களிலிருந்து 20 பிரதிநிதிகளும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலிருந்து சுமார் 100 பிரதிநிதிகளும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேராசிரியர் பில்லியோசா தலைமையில் ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் 11ம்ந் தேதி முடிய தமிழ் ஆராய்ச்சி பற்றிய உரைகள் ஆற்றுவர்.
ஆயினும் உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகின்ற பொது மக்களை பொறுத்தவரையில் அவர்களது கவனத்தை ஈர்க்க வல்லதாக இக்கருத்தரங்கு அமைய இயலாது அல்லவா? இதனை உணர்ந்த மாநாட்டுக் குழுவினர், தமிழக முதல்வரின் அறிவுரைக்கிணங்க கருத்தரங்கினையொட்டி ஏழு நாட்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளத்தக்க வகையில் பெரியதோர் தமிழ் விழாவினை சென்னையில் நடத்திட வேண்டுமென தீர்மானித்தார்கள்.
அதற்கொப்ப புறப்பணிக் குழுவினர் ஐலந்து மைதானத்தில் பூம்புகார் நகரத்தையே நிர்மாணிக்கிறார்கள் எனலாம்.
உலகத் தமிழ் மாநாட்டிற்கு முத்தாய்ப்பு வைப்பது போல் விழா நிறைவுப் பேருரையை மாநாட்டின் இறுதிக் கட்டத்தில் தமிழக முதலமைச்சர் அண்ணா ஆற்றுகிறார்.
"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்,
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்,
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை,
திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்''
என்ற பாரதியின் வாக்கினை நிறைவேற்ற-
"தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்'' - என்று பாரதிதாசன் தந்த உணர்வைப் பெற வாரீர் - வாரீர் - தலைநகர் நோக்கி! வாழ்க - வணக்கம்'' என்று பேசியிருந்தேன்.
இதுவரை உலகின் பல பகுதிகளில் நடந்த எட்டு மாநாடுகளும் உலகத் தமிழ் மாநாடுகள். இப்போது கோவையில் நடக்க இருப்பதோ நம் மொழிக்குச் செம்மொழி எனும் சிறப்பும் கலந்த 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு''. இந்த இனிய உணர்வுடன் தொடர்ந்து எழுதுகிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
மாநாடு குறித்து கலந்தாய்வு கூட்டம்:
இந் நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.
இதில் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications