இந்தியாவை ஆளும் மாநிலம் எது?-கருணாநிதி
இதன்மூலம் மத்திய அரசை காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான அதிகாரிகளைக் கொண்ட 'மலையாள லாபி' ஆட்டுவித்துக் கொண்டிருப்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாகத் தெரிகிறது.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிற நிலையில், அங்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை கேரள அரசு தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து முதற் கட்டமாக 142 அடி ஆக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு புதிய சட்டத் திருத்தத்தை கேரள அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிக் கொண்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையில் உள்ள நிலையிலேயே, அதை வேண்டுமென்றே மறைத்துவிட்டு, புதிய அணை ஒன்று கட்டுவதற்காக கேரளப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மூலமாகப் பெற்றது.
இதைக் கடுமையாக எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசின் ஆய்வுக்கு தடையாணை கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதையும் கேரள அரசு துச்சமாக மதித்து, அந்த அரசின் அமைச்சர்கள் மட்டத்திலே மாத்திர மல்லாமல், முதல்வர் அச்சுதானந்தன், தமிழகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் எதிர்ப்பு, பிரச்சனையை அரசியலாக்கி ஆதாயம் பெற செய்யப்படும் முயற்சி என்று கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே கேரளத்தின் சார்பாக மத்தியில் அமைச்சராக இருக்கும் தாமஸ், இந்த சர்ச்சை இரு மாநிலங்களின் நல்லுறவை பாதிக்கக் கூடியது. எனவே இரு மாநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது இது போன்ற தேவையற்ற மோதல்கள் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்படாமல் கவனமாக இருக்கும் நிலை தான் தமிழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நிலை என்பதை கடந்தகால நிகழ்வுகள் பலவற்றின் மூலம் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நீதிக்குத் தலை வணங்கும் நிலையைத்தான் தமிழக அரசு இதுபோன்ற மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளில் பின்பற்றி வருகிறது.
நீதிமன்றத்திலே வழக்கு நிலுவையில் இருந்து வரும் சூழலில் 'சப்-ஜூடிஸ்' என்று தெரிந்தும் கேரள அரசு தானே நீதிமன்றம் என்று பாவித்துக் கொண்டு சட்டம் இயற்றுவதும், புதிய அணைக்கான ஆய்வினை மேற்கொள்வதுமான 'சப்- ஜூடீஸ்' எனப்படும் வரம்பினையும் மீறி செயல்படுவது, சட்ட ஆட்சி முறைக்குச் சரிதானா? என்பதை சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதிலும் பாரம்பரியம் மிக்க ஒரு தேசிய அரசியல் கட்சி கேரளாவில் ஆட்சியில் இருந்து கொண்டு இம்மாதிரியான வழிகளைப் பின்பற்றுவது முறைதானா? என்பதையும் கவனத்திலே கொள்ள வேண்டும்.
தாங்கள் எண்ணுவதை வழிமுறைகளை மீறி சட்டத்தை மிதித்துக் கொண்டு நிறைவேற்றவே முற்படுவோம் என்று மார்தட்டுவதும், அதைத் தமிழ் மாநில அரசு தலைவணங்கி ஏற்றுக்கொள்வதும் தான் கேரள அரசின் நடைமுறைச் சித்தாந்தம் என்பதை இத்தகைய செயல்களின் மூலம் காட்டுவார்களேயானால், இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற மாநிலம் எது என்ற சந்தேகத்திற்கு மக்கள் ஆட்பட நேரிடும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.