பெண் போலீசை கற்பழித்து கொன்ற 'சைகோ' கைது-8 பேரை கொன்றவன்
கோவை: பெண் போலீசை கற்பழித்து கொன்ற லாரி டிரைவர் 57 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஜெயமணி (39) காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலி்ன் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இவர் பணி முடிந்து வீடு திரும்பவில்லை.
இந் நிலையில் திருப்பூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காளிபாளையம் பிரிவில் ஒரு சுடுகாட்டில் அழுகிய நிலையில் ஜெயமணியின் பிணம் கிடந்தத.
பிணத்தின் அருகே அவர் அணிந்திருந்த தொப்பி மற்றும் உடைகள் தாறுமாறாகக் கிடந்தன.
பிரேத பரிசோதனையில் ஜெயமணி கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த தனிப்படை போலீசார் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த லாரி டிரைவர் சங்கர் (32) என்பவரை இப்போது கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவில் பணி முடிந்து திரும்பிய ஜெயமணி அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற சங்கரிடம் 'லிப்ட்' கேட்டுள்ளார்.
அவரை ஏற்றிச் சென்ற சங்கர், சுடுகாடு அருகே மறைவான இடத்தில் வைத்து கத்திமுனையில் ஜெயமணியை கற்பழித்துள்ளான். பின்னர் தப்பியோடிவிட்டான்.
ஜெயமணியின் செல்போனையும் திருடிச் சென்ற சங்கர் அதை பயன்படுத்தி வந்ததால் அவன் பிடிபட்டுள்ளான். அந்த போனின் ஐஎம்இஐ எண்ணை கொண்டு, செல்போன் சேலத்தில் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து சங்கரை போலீசார் மடக்கினர்.
சங்கர் செய்த 9 கொலைகள்!!:
போலீசாரிடம் சங்கர் கொடுத்துள்ள வாக்குமூலம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
சங்கர் என்கிற ஜெய்சங்கர் ஒரு ரவுடி. லாரி டிரைவராகவும் வேலை செய்து வருகிறான். இவன் இதுவரை 9 கொலைகள் செய்துள்ளான்.
சங்கையூர் அம்மன் புதூரைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி இந்திராகாந்தி என்பவரை 2008ம் ஆண்டில் கற்பழித்து கொலை செய்துள்ளான்.
திருப்பூர் மாவட்டம் சடையாம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி பழனியம்மாள் (35), திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த அன்பரசுவின் மனைவி லட்சுமி (29), தர்மபுரி மாவட்டம் தொம்பரக்காம்பட்டி பாளையம் புதூரை சேர்ந்த முதிய பெண்ணான ஜெயதங்கம் (70), தர்மபுரி மாவட்டம் குலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரனின் மனைவி அமுதா (32),
கிருஷ்ணகிரி மாவட்டம் கரட்டுக்குட்டையை சேர்ந்த பாலாஜியின் மனைவி ரமாமணி (35), நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தை சேர்ந்த குப்புசாமியின் மனைவி பொன்னா (53), திருச்சி மாவட்டம் ஆசாரிபாளையத்தை சேர்ந்த சீனிவாசனின் மனைவி பொன்னுபாப்பா (60) ஆகியோரை கொன்று நகைகளை கொள்ளையடித்துள்ளான்.
அதே போல தர்மபுரி மொல்லையன் கோட்டையை சேர்ந்த முத்து என்பவரது மகன் சண்முகத்தையும் (45) நகைக்காக கொன்றுள்ளான்.
இதில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை கற்பழித்து கொன்றுள்ளான். தனியாக இருக்கும் பெண்களை கற்பழித்து கொல்வதுதான் தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளான். இவன் சைகோ கொலைகாரன் போல காணப்படுகிறான்.
நெடுஞ்சாலைகளில்தான் இவனது குற்றச் செயல்கள் நடந்துள்ளன. தனியாக செல்லும் பெண்களையும், ஆடு, மாடு மேய்க்கும் பெண்களையும் குறிவைத்தே தாக்கியுள்ளான். இவனிடம் பெண் போலீஸ் ஜெயமணியும் சிக்கி கொண்டுவிட்டார்.
சங்கர் மீது 8 கொள்ளை வழக்குகளும் பதிவாகி உள்ளன என்றார்.