மன்மோகன் அரசுக்கு முதல் 'ஆசிட் டெஸ்ட்'!: 3 மாநில தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை!
டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் சோதனையாக நடந்து முடிந்த 3 மாநில சட்டசபைத் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அருணாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு கடந்த 13ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை தொடங்குகிறது.
தேர்தல் முடிந்து கடந்த பத்து நாட்களாக இந்த மூன்று மாநில மக்களும் யாருக்கு வெற்றி என்பதை அறிய சஸ்பென்ஸோடு காத்துள்ளனர். நாளை காலை 11 மணிக்கே முழு முடிவுகளும் தெரிந்து விடும்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நடந்துள்ள முதல் பெரிய தேர்தல் என்பதால் மன்மோகன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போல இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
மீண்டும் காங் ஆட்சி-கருத்து கணிப்பு:
மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்பு வெளியி்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.