தாஜ்மஹாலின் நகலை நியூசிலாந்தில் வடிவமைக்கும் இந்தியர்கள்
அச்சு அசலாக இந்தியாவில் உள்ளதைப் போலவே இந்த தாஜ்மஹால் உருவாகவுள்ளது. நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இந்த புதிய தாஜ் மஹாலை கட்டி எழுப்பவுள்ளனர்.
ஆக்லாந்தின் புறநகரான ஈடன் சே பகுதியில் உள்ள வடக்கு சாலையில், அமைந்துள்ள மகாத்மா காந்தி மைய வளாகத்தில் இந்த தாஜ்மஹால் கட்டப்படும்.
இதுகுறித்து காந்தி மையத்தின் தலைவரான கானு படேல் கூறுகையில், இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் பிரமாண்டத்தை இந்த புதிய தாஜ்மஹால் பிரதிபலிக்கும். இந்தியர்களின் பெருமையையும் இது பறை சாற்றும் என்றார்.
இந்த தாஜ்மஹாலில் மார்பிள்களால் ஆன மசோலியம், ஒரு குளம், தங்க முலாமிடப்பட்ட ஆபரணங்கள் ஆகியவை இடம் பெறும்.
இந்த இடத்தை ஆக்லாந்து இந்திய சங்கம் கடந்த 1990ம் ஆண்டு விலைக்கு வாங்கியது.
இந்த மாதத்திலிருந்து தாஜ் மஹால் கட்டத் தேவையான நிதி வசூலில் காந்தி மையம் இறங்கியுள்ளது. பெருமளவில் நிதி வந்து குவிகிறதாம்.
நிதி வந்து குவிந்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கானு படேல், நிதி பெருமளவில் வருகின்ற போதிலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நிச்சயம் காலம் பிடிக்கும். உருவான பின்னர் இது ஆக்லாந்து நகரின் மிக முக்கிய அடையாளமாக மாறும்.
போதியஅளவு பணம் சேர்ந்ததும் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம் என்றார்.