நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம்-மொய்லி
டெல்லி: நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்து வருவதால், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு வரப்படும் என்றார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
நீதிபதிகள் மீது லஞ்சப் புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் நீதிபதிகளாக பதவி வகிப்பதை அரசு விரும்பவில்லை.
இப்போது நீதிபதிகள் நியமனம் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள பழைய நடைமுறைகளைதான் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். நீதிபதிகள் மீது புகார்கள் எழுவதால், நீதிபதிகள் நியமன முறையை மாற்ற முடிவு செய்துள்ளோம். குற்றப் பின்னணிக்கு ஆளாகும் நீதிபதிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றார்.
சொத்து கணக்கு-நீதிபதிகளுக்கு மேலும் அவகாசம்:
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய மேலும் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
இந் நிலையில் தற்போது, நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய மேலும் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி மீது செருப்பு வீசிய பெண்களுக்கு சிறை:
இந் நிலையில் மும்பை போஸ் இசைப் பள்ளியின் பெண் நிர்வாகிகள் சரிதா பாரிக், அனெத்தே கோதியன், பவித்ரா முரளி, லீலா டேவிட் ஆகிய 4 பேர் மீது விபச்சார புகார் உள்பட ஏராளமான புகார்கள் குவிந்தன.
அது தொடர்பான வழக்கு விசாரணை, கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, நீதிபதி அரிஜித் பசாயத் மீது அந்த பெண்கள் செருப்பை வீசினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரிப்பதற்காக நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சிங்வி, டத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டது.
விசாரணை நடத்திய பெஞ்ச், 4 பெண்களுக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications