சோனியாவுடன் சந்திப்பு-ஜெகன்மோகனுக்கு மந்திரி பதவி?
டெல்லி: ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சர் பதவியை வழங்குவதாக சோனியா கூறினாராம். இதற்கு ஜெகன் மோகன் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி எம்.பி., முதல்வர் பதவிக்காக காத்திருக்கிறார். ராஜசேகர ரெட்டி மறைந்தவுடனேயே ஜெகன்மோகனைத்தான் காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கும் என அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் திடீரென ரோசய்யாவை முதல்வராக்கி விட்டது காங்கிரஸ் மேலிடம். இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இதில் சோனியா காந்தியின் பேனர்களையும் அவர்கள் எரித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது டெல்லி வந்துள்ளார் ஜெகன்மோகன். நேற்று டெல்லி வந்த அவர் ஆந்திர மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லியை சந்தித்துப் பேசினார்.
ஆந்திர அரசியல் நிலவரம், தனது ஆரவாளர்களின் எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து ஜெகன் மோகன் மொய்லியிடம் ஆலோசித்ததாக தெரிகிறது.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் வெளியில் வந்த ஜெகன் மோகன் ரெட்டி காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர் நேரம் ஒதுக்கித் தந்தால் நிச்சயம் அவரை சந்திப்பேன் என்றார்.
இந்த நிலையில் இன்று காலை சோனியா காந்தியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜெகன் மோகனை மத்திய இணை அமைச்சராக்க விரும்புவதாக சோனியா கூறியுள்ளார். மேலும், கப்பல் போக்குவரத்துத் துறை பொறுப்பை அளிக்கவிருப்பதாகவும், விருப்பமா என்றும் கேட்டுள்ளார். இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி சம்மதம் தெரிவித்தார் என்றும் தெரிகிறது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், சோனியா மேடத்தை நான் சந்தித்துப் பேசினேன். எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்றார்.
எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆந்திர மாநில அரசியல் குறித்து கேட்டறிந்து கொண்டார் என்றார்.
ஜெகன் மோகன் ரெட்டியுடன் வீரப்ப மொய்லி, ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரான கே.வி.பி.ராமச்சந்திர ராவ் ஆகியோரும் சென்றனர்.
முன்னதாக, டெல்லிக்கு வருமாறு ஜெகன் மோகனை காங்கிரஸ் மேலிடம் அழைக்கவில்லையாம். மாறாக நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே ஜெகன்மோகன் டெல்லி வந்துள்ளாராம். ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் அவர் டெல்லி வருவது இதுவே முதல் முறையாகும்.
நாங்கதான் இப்போ ஸ்டிராங் - நாயுடு
இதற்கிடையே, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்து விட்டதால் விரைவில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வரும். அப்போது தெலுங்கு தேசம் பெரும் வெற்றி பெறும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ராஜசேகர ரெட்டி இருந்த போது ஆந்திர காங்கிரஸ் கட்டுக்கோப்பாக இருந்தது. அவர் தலை சிறந்த நிர்வாகி. அவர் மறைந்ததும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவியைப் பெற பல்வேறு தலைவர்கள் போட்டி போடுகின்றனர். இதனால் கோஷ்டி பூசல் அதிகரித்து விட்டது.
இதனால் ஆந்திர சட்ட சபைக்கு மீண்டும் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் தெலுங்கு தேசம் தொண்டர்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். தற்போது ஆந்திராவில் பலம் வாய்ந்த ஒரே கட்சி தெலுங்கு தேசம் தான் என்றார்.