நான் பாதி தமிழன்.. தமிழகத்திற்கு எதிரானவன் அல்ல: ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷைக் கடுமையாக கண்டித்துள்ளார் முதல்வர் கருணாநிதி. மேலும், ஜெய்ராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து நவம்பர் 1ம் தேதி மதுரையில் திமுக சார்பில் மாபெரும் கூட்டம் நடைபெறும் எனவும் திமுக அறிவித்துள்ளது.
இதையடுத்து 'யாருடைய' அறிவுரையையோ ஏற்று நான் தமிழ்நாட்டுக்கு விரோதமாக நடக்கவில்லை என்று சொதப்பல் பேச்சை வெளிப்படுத்தியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தமிழ்நாட்டுக்கு விரோதமானவன் அல்ல. நானே கூட பாதித் தமிழன்தான். எனது மனைவி ஜெயஸ்ரீ 100 சதவீத தமிழச்சி.
திமுக நிறுவனர் அண்ணாதுரை, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை நான் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன். திமுக சமூக நீதிக்காக போராடி வரும் ஒரு கட்சி. அந்த மதிப்பை நான் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை.
அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது, அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது என்பது குறித்து ஏற்கனவே நான் முதல்வர் கருணாநிதிக்கு விரிவாக சுட்டிக் காட்டியுள்ளேன் என்றார் ரமேஷ்.