சென்னையில் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையி்ல் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சி நிலையம் மற்றும் ஆங்கில பத்திரிகை அலுவலகம், அடையார் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. அந்த கடிதத்தில் அனுப்புனர் முகவரி எதுவும் இல்லை. அடையாறு பகுதியில் இருந்து இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதங்கள் அனைத்தும் ஒன்றுபோல இருந்தது. அந்தக் கடிதங்களில், சென்னை விமான நிலையம், சென்டிரல்-எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட 12 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் குறிப்பிட்ட இந்த இடங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். கோட்டூர்புரத்திலும், கொடுங்கையூரிலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். முடிந்தால் அவர்களை பிடித்து பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து விசாரணை தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மற்றும் எழும்பூர்- சென்டிரல் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் கொண்டு வரும் உடமைகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது.
மிரட்டல் கடிதம் வந்த அடையாறில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
3 மிரட்டல் கடிதங்களும் தீவிரவாதிகள் பெயரில் அனுப்பப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அனுப்பியது யார்? என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications